காலமும் இடமும்

நேரம் சுமார் 3, 3:30 இருக்கும். நல்ல பிப்ரவரி மாசத்து மாலை இளவெயில். வண்டியின் பின் சீட்டில் நண்பன். காலியான மவுண்ட் ரோட்டில் ஐந்தாவது கியரில் வண்டியை செலுத்தி கொண்டு போய்க்கொண்டு இருக்கிறேன். கடற்கரை காற்று சில்லென்று வீசி கைகளில் லேசாக துளித்திருந்த வியர்வையை திருடிக்கொண்டு சென்றது. Next »|

காலை 7 மணி இருக்கும். கட்டிலுக்கு அருகே இருக்கும் ஜன்னல் கதவு இரவு மூடி தான் இருந்தது. காலையில் என்னை தட்டி எழுப்ப வேண்டாமென்று நினைத்த என் அம்மா, அந்த வேலையை சூரியனுக்கு கொடுத்துவிட்டு ஜன்னலை திறந்து விட்டாள் போலும். கொடுத்த வேலையை சூரியன் சுளீரென்று செய்தது. கண்ணை கசக்கி விழித்து பார்க்கையில் சூரிய கதிர்களில் தூசி துகள்கள் நடனமாடி கொண்டிருந்தன. “எழுந்தாச்சா ? சீக்கரம் கெளம்பு ஸ்கூலுக்கு லேட் ஆகுது” என்ற குரல் தூரத்தில் ஒலித்தது. Next »|

இங்க காபி ஐஸ்கிரீம் நல்ல இருக்கும், ட்ரை பண்றியா” என்றேன். “இல்ல எனக்கு வெண்ணிலா தான் பிடிக்கும்” என்றாள். அதையே ஆர்டர் செய்து விட்டு பேசுவதரியாது அவள் அணிந்திருந்த பச்சை சுடிதார் மிகவும் அழகாக இருந்ததாக கூறினேன். அக்கம் பக்கத்தில் யாரும் தெரிந்தவர்கள் பார்த்து விட போகிறார்கள் என்ற பயத்துடன் நான் கூறியதை கேட்டு வெட்கப்பட்டு “தேங்க்ஸ்” என்றாள். Next »|

கல்லூரி உணவு விடுதி வாசலில் ஒரு சிறிய குட்டி சுவரு. அதில் அமர்ந்து காலை ஆட்டியபடி நண்பர்களுடன் ஆளுக்கு ஒரு சாத்துக்குடி ஜூஸ் அருந்திக்கொண்டு தீவிர கலந்துரையாடல். “டேய் அவ மெக்கானிக்கல் தான். காலைல தான் ஒர்க்க்ஷாப் பக்கத்துல பாத்தேன்” என்றான் ஒருவன். “வாய்ப்பே இல்ல, ECE தான், என் பிரெண்டு சொன்னான்” என்றான் இன்னொருவன். இந்த உரையாடலில் கிளாசை மறந்து விட்டோமென்று வேகமாக சுவற்றில் இருந்து குதித்தோம். Next »|

இங்க பாரு, மணி 10 ஆக போகுது. இன்னிக்காவது எழுந்து வேலையை பார்க்கலாம” என்றேன். “சண்டே தானே. இன்னும் ஒரு அரை மணி நேரம் தூங்கலாம்” என்று சொல்லி என் தோளில் ஏறி படுத்தாள் மனைவி. இயற்கையோ, ஷாம்பூவோ அந்த கூந்தல் மணத்தை அடித்துக்கொள்ள எந்த வாசமும் இல்லை. Next »|

எந்த வித அறிவிப்பும் இல்லாமல் மழை திடீரென வானத்தை பிளந்து கொட்டியது. நாம் இந்த நேரத்தில், இந்த ரோட்டில் வருவோம்; மழையும் வருமென்று முன்னமே தெரிந்து வைத்திருந்த ஞானி ஒருவர் அங்கு டி கடை ஒன்னு போட்டு வைத்திருந்தார். வேகமாக வண்டிக்கு சைடு ஸ்டாண்டு போட்டு ஓடி வந்து. “அண்ணா ஒரு டி” என்றேன். “அப்டியே ரெண்டு பஜ்ஜி” என்று சொல்லிவிட்டு தலையை கைகளால் துவட்டி விட்டேன். பஜ்ஜியை ஒரு கடி கடித்தேன் …. Pause ||

…வீடு வந்துவிட்டது, காரை நிறுத்தினேன். கூடவே பாட்டும் நின்றது. கடையில் வாங்கி வந்த பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றேன். 90’ஸ், 00’ ஸ் பாடல்கள் நமை கொண்டு செல்ல முடியாத காலமும் இடமும் உண்டா என்ன ?

Comments (2)

  1. Dec 27, 2021 at 2:29 AM
    promise me one thing. you should give me rights to will publish all ur writings as a book . classic one buddy
  2. Dec 27, 2021 at 4:22 AM
    அருமையான பதிவு. மலரும் நினைவுகளை மிகவும் அழகான வார்த்தைகளால் தொடுத்து இருக்கிறாய். மாதத்திற்கு ஒரு பதிவு கண்டிப்பாக போடவும். Spoken words fly away, writings remain. (Latin saying Verba volent, Script manent) Keep writting.

← Back to Blog